சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு அவுட்சோர்சிங் முறையில் ஓட்டுனர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தனியார் நிறுவனம் மூலம், அவுட்சோர்சிங் முறையில் 400 ஓட்டுனர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை அனுமதிக்க முடியாது. விரைவு போக்குவரத்து கழகத்திற்கு அவுட்சோர்சிங் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை நியமிப்பது இத்துடன் முடிவடைந்து விடாது. இதுவே வழக்கமாக மாறி, ஒரு காலத்தில் அவுட்சோர்சிங் ஊழியர்கள் மட்டும்தான் அனைத்து துறைகளிலும் பணியில் இருப்பார்கள். அத்தகைய நிலை தடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் முதல்கட்டமாக, விரைவு போக்குவரத்து கழகத்திற்கு அவுட்சோர்சிங் முறையில் ஓட்டுனர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக அனைத்து உரிமைகளுடன் கூடிய நிரந்தர ஓட்டுனர்களை அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும்.